தூய்மை இந்தியா

சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்?

ஒன்று அவர்கள் மோடியை வெறுப்பவராகவோ, அல்லது எதிர்க் கட்சியை சேர்ந்தவராகவோ இருப்பார். ஆனால் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் முடிந்த அளவிற்கு பரப்பி அதனைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் குப்பையை ஓரிடத்தில் பரப்பி வைத்துவிட்டு பின்னர் அதனை சுத்தம் செய்வது போன்ற ஒரு காணொளி. கண்டிப்பாக இதனைப் பார்த்திராத ஒரு இணைய வாசகன் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த காணொளி பரப்பப்பட்டு விட்டது. இதில் பிற மதங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் சுய லாபத்திற்காக இதனை மீண்டும் மீணிடும் பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்துகிறார்கள்.

மற்றொரு சம்பவம் சீமான் போன்றவர்கள் மேடைப்பேச்சுகளில் இது ஒரு வெற்று விளம்பரம், முதலில் குப்பைகளைப் போடாமல் இருக்கக் கற்றுக்கொடுங்கள், கழிப்பறை கட்டிக்கொடுங்கள் பின்னர் சுத்தம் செய்யுங்கள் என்பது போன்ற ஆக்ரோஷமான மொழிகளில் பேசி இத்திட்டத்தின் நோக்கத்தினை முடிந்த அளவிற்கு சிதைத்து வருகின்றனர். அதிலும் அவர் ஏன் ரோட்டில் குப்பை பொறுக்குபவனையோ, இல்லை சாக்கடை அள்ளுபவனையோ அழைக்காமல் பிரபலங்களை மட்டும் அழைக்கிறார் மோடி என்றெல்லாம் ஆக்ரோஷமாகக் கதறுகிறார். இக்காட்சியெல்லாம் இன்று இணையத்தில் அதிகம் உலாவுபவை. எதற்காக பிரபலங்களை மோடி அழைத்தார் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாதவரா இந்த‌ சீமான்?

நண்பர்களே பிரபலங்களை அழைப்பது என்பது அவர்களை தெருவில் இறங்கி சாக்கடையை அள்ளுவதற்காக‌ அல்ல. அவர்கள் ஒரு குறியீட்டுப் பொருள். அவர்களால் சமூகத்தில் ஏற்பட இருக்கும் விழிப்புணர்வுதான் நோக்கம். சீமான் கூறுவதுபோல யாரோ ஒரு தொழிலாளியை மோடி அறிவித்திருந்தால் இச்செய்தி ஒரு வழக்கமான அரசின் அறிவிப்பாகவே இருந்துவிட்டுப் போயிருக்கும் தானே? பிரபலங்களின் வழியாக இச்செயல்பாடு மீண்டும் மீண்டும் சமூகத்தின் சிந்தனையில்,செய்தியில் இருப்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போன்ற திட்டங்களை விமர்சனங்கள் செய்பவர்களைப் பார்த்தால் ஒன்று தெரியும். இவர்களால் எதுவும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வேறு யாராவது அதனை செய்தால் அதில் குறை சொல்வார்கள். சரி வாருங்கள் விவாதத்திற்கு என அழைத்தால் நாங்கள் இதனை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை, அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஏதாவது காரணத்தை அடுக்குவார்கள்.

நன்கு சிந்தியுங்கள் நண்பர்களே ஒரு குளிர்பானம் அருந்த வேண்டும் என்ற மனநிலை வந்த உடனேயே ஏதோ ஒரு பானத்தின் பெயர் நம் நினைவுக்கு வருகிறது. அது எப்படி சாத்தியமானது. அந்நிறுவனம் பல்வேறு வழிகளில் அதனை நம‌க்கு நினைவூட்டி நினைவூட்டி நம் மனதில் அதனை நிறுத்தியிருக்கிறது. இத்திட்டமும் அப்படியே. மீண்டும் மீண்டும் குப்பைகளைப் பற்றி விவாதிப்பதன் மூலம் நம் மனநிலையிலேயே இயல்பான குப்பை போடாத எண்ணத்தை கொண்டுவருவதே நோக்கம்.

இதிலும் குறைகள் இருக்கலாம். ஒரு சிலர் புகைப்படம் மட்டும் எடுத்து ஏமாற்றலாம். நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அவையெல்லாம் கடந்தும் கூட இது நமக்கான திட்டமே. பிழையோடே இத்திட்டம் செல்லட்டுமே. பின்னாளில் அது அதற்கான சரியான வழியைக் கண்டுகொள்ளும் தானே. இந்திய சுதந்திர வரலாற்றில் இது போன்ற செயலை இதுவரை வந்த எந்த அரசும் செய்யவில்லை. இவர்கள் செய்கிறார்கள். நம்மால் பங்குகொள்ள முடியவில்லை என்றாலும், பழிக்காமல் இருப்போம். இந்தியக் குழ‌ந்தை முதலில் தவழட்டும், பின்னர் அது ஓடுவதைப் பற்றி யோசிப்போம். எடுத்த உடனேயே ஓடவேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.