India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், இந்திரா காந்தியின் தோல்விகள், அதனால் இந்திரா காந்தி படுகொலை, அரசியலையே விரும்பாத ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தது, அவருடைய பொருளாதாரத்திட்டங்கள், விடுதலைப்புலிகள் மீதான செயல்பாடுகள், ராஜீவ் காந்தியின் மரணம் என சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான அனைத்து நிகழ்வுகளையும் முழுக்க முழுக்க ஆதாரங்களோடு மிக விரிவாக எழுதியுள்ளார் குஹா.
நான் ஏற்கனவே கூறியதுபோல ராமச்சந்திர குஹாவின் எண்ணங்களும் கருத்துக்களும் அல்ல இப்புத்தகம், கடைசி சில அத்தியாயங்கள் தவிர. அக்காலகட்ட விமர்சகர்களாலும், இந்திய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாலும், எதிர்க்கட்சியினராலும் எழுதப்பெற்ற கட்டுரைகள்,கடிதங்கள், அரசு உத்தரவுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் இக்காலத்திலிருந்து நோக்குவதால் அவற்றின் விளைவுகளையும் அறிய முடியுமென்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தி விளைவுகளோடு பொறுத்தி தந்திருக்கிறார் குஹா.
இறுதி சில அத்தியாயங்களில் இந்தியா இன்னும் ஒற்றை தேசமாக நீடித்திருப்பதற்கான காரணங்கள், அதன் பொருளாதார முன்னேற்றத்தின் காரணம், நடைபெற்ற ஏதோ செயல்களால் மறுபக்கம் ஏற்பட்ட பலன்கள், இந்திய சினிமாவின் வளர்ச்சி, தேச ஒற்றுமையில் அவற்றின் பங்கு என சிலவற்றில் தன் கருத்தினைப் பட்டியலிட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.