ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன்.

ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு மாபெரும் அரசியல் அறிவு உள்ளதாகக் காட்டிக்கொண்டவர்களோ இப்போது அடுத்த செய்தியை நோக்கிப் போய்விட்டார்கள். அந்தச் செய்தியும் தொய்வடைந்தவுடன் அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.அவர்களெல்லாம் அறிவுஜீவிகள் அல்ல. வீண் மனிதர்கள். அதாவது படிக்காதவர்கள் அதிகமிருந்த காலத்தில் இருந்த வீண் மனிதர்களை விட படித்த மக்கள் அதிகம் வாழும் இக்காலத்தில் இருக்கும் வீண் மனிதர்கள் அதிகம்.

அவர்கள் செய்வதெல்லாம் ஏதாவது செய்தியை வைத்துக்கொண்டு அதில் தான் முழு அளவிலான ஆராய்ச்சியை செய்தது போலப் பேசுவார்கள். சற்று பின்னோக்கிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாளிதழில் அது அன்றைய செய்தியாய் இருந்திருக்கும். தினம் நாம் அப்படிப் பல நபர்களை சந்திக்கலாம். மிகப்பெரிய விஷயத்தை தானே ஆய்வு செய்தது போல பேசுவார்கள். பார்த்தால் அது தினமலரிலோ, ஃபேஸ்புக்கிலோ வந்திருக்கும்.

தகவல் தொடர்பு அதிகமாக அதிகமாக அறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை உயரும் என்ற கருத்து வலுவிழந்து கொண்டே வருகின்றது. தானாகத் தேடிப் படித்த காலத்தில் இருந்த புத்தி ஜீவிகள் மட்டுமே இன்றும் புத்திஜீவிகளாக இருக்கின்றனர், அதே விகிதத்தில். அக்காலத்தில் அறிதலின்றி இருந்த மக்கள் இன்றும் அதே அறிதலின்றியே இருக்கின்றனர். வித்தியாசம் ஒன்றுமே இல்லை. எல்லாம் தன்னை நோக்கி வர வேண்டும், தன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற அன்றை அதே மனநிலை கொண்ட மக்களே இன்றும் இணையத்தில் எந்த புது முயற்சியையும் செய்யாமல் தன்னிடத்தே வரும் தகவல்களை வைத்தே தான் அறிவுஜீவி என்ற எண்ணத்தை அடைகின்றனர். இது அக்காலத்தைக் காட்டிலும் மிக மோசமானது. அன்றைய மக்களுக்கு குறைந்த பட்சம் தான் அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமிருந்தது. அதனால் அவர்களால் சமூகத்திற்கு பெரிய பாதிப்பேதும் இல்லை. ஆனால் இன்று உள்ள ஒருவனுக்கு தான் உண்மையான அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமே கிடையாது. எல்லாவற்றிலும் தன்னிடத்தில் அறிவு உண்டு என்ற எண்ணம் கொண்டே சமூகத்தை சீரழிக்கின்றனர்.

உதாரணமாக ஜெயலலிதா வழக்கின் போது ஜெயலலிதா ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட, அதனை ஷேர் செய்த பலர் உண்டு. அவர்கள் ஜெயலலிதா பற்றிய முன்முடிவுகளுக்கு எப்பொழுதோ வந்திருப்பார்கள். அவர்களுடைய முடிவுகளுக்கு வலு சேர்க்கும் விஷயங்களைப் பார்க்கும்போது அதனை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். மறு தரப்பைப் பற்றிய எண்ணமே இருக்காது, இருந்தாலும் அதனை எப்படி பொய்யென்று நிருபிப்பதென்பதிலேயே எண்ணம் இருக்கும். அதனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை கவிழ்கும் எண்ணத்திலேயே கவனிப்பார்கள்,வாசிப்பார்கள் அறிந்துகொள்வதற்காக அல்ல.

மற்றொன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம் செய்தவர்களோ, அல்லது கட்சி நபர்களோ முன்முடிவுகளோடு வாதிட்டவர்கள் மட்டுமே. (உண்மையான பொதுமக்கள் இதில் பங்கேற்றார்களா என்பதே கேள்வி?) அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஒருவேளை ஜெயலலிதா நிரபராதி என விடுவிக்கப்பட்டிருந்தால் நீதி வென்று விட்டது என்று நீதிபதியைக் கொண்டாடி இருப்பார்கள். தண்டனை பெற்றதால் அரசியல் சூழ்ச்சி என்கிறார்கள். மோடி வெளிநாடு போய்விட்டார் என்கிறார்கள், குன்ஹா கன்னட வெறியர் என்கிறார்கள். அவர்கள் தரப்பு என்பது ஜெயலலிதா செய்வது சரியே. அது எதுவென அவர்களுக்கு கவலை இல்லை.

இன்றை இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின்படி 100 க்கு 99 விழுக்காடு தவறு இருந்து 1 விழுக்காடு தப்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தாலே அரசியல்வாதிகள் தப்பித்து விடுவார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அதில் தண்டனை பெற்றவர்கள், விடுதலையானவர்கள் என்ற கணக்கைப் பார்த்தால் புரியும். 0.1 விழுக்காடு அரசியல்வாதிகள் கூட தண்டிக்கப்பட்டதில்லை. அதுதான் உண்மை. ஆனால் வழக்கு தொடங்கும் காலத்திலும், அதனைப் பற்றிய தீவிர நிகழ்வுகளின் போதும் மட்டும் ஊடகங்களில் பெரியதாக பேசுவதோடு சரி. மக்களும் அப்படியே. ஆனால் ஜெயலலிதாவின் வழக்கில் அப்பட்டமாக மாட்டிக்கொண்டார். வேறு வழியே இல்லை. அதனால் அவர் ஊழல் செய்யவில்லை என்ற வாதமே வீண். எவ்வளவு தண்டனை, எவ்வளவு அபராதம் என்பது மட்டுமே நாம் அறிய வேண்டியது. ஆனால் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள். திரும்பத்திரும்ப ஜெயலலிதாவின் தரப்பை நியாயப்படுத்த ஆட்களைத் திரட்டியோ மிரட்டியோ போராட வைத்தனர்.

தன் தரப்பினைச் சார்ந்தவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் சரியாகவே பார்க்கப்படும் மனநிலை உள்ளவரை ஆயிரம் அரசு அமைந்தாலும் இந்தியாவில் மாற்றம் வராது. நம் மக்கள் ஊழல்வாதிகள். அரசும் அதிகாரிகளும் அடுத்ததுதான். தனக்கு லாபமென்றால் சரி எனும் மக்களின் மனப்பாங்கு, சம்பந்தமே இல்லாமல் எங்காவது ஊழல் நடக்கும் போது பொங்கி எழும். ஒன்றைத் தெரிந்து கொள்வோம், நமது அரசியல்வாதிகள் நம்  பிரதிபலிப்புகளே.

எல்லாவற்றிற்கும் அதிகாரிகள் சரியில்லை, அரசு சரியில்லை, நிர்வாகம் சரியில்லை என்று சொல்லும் ஒருவனே முதல் ஊழல்வாதி. ஒரு நபரின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தால் அவனை மாற்று சார்பு கொண்டவனாகவே அடையாளப்படுத்துவது நம் சமுதாயத்தின் இழிநிலை.  உதாரணத்திற்கு ஜெயலலிதா வழக்கைப் பற்றி பேசினால் உடனே ஒருவன் அப்போ 2G என்று ஆரம்பிப்பான். அதற்காகவே ஒவ்வொரு முறை எழுதும்போதும் யாரைப்பற்றி எழுதுகிறோமோ அவர்களின் எதிர்த்தரப்பின் குறைகளை சுட்டிக்காட்டி அதுவும் தவறு இதுவும் தவறு தன் நடுநிலைமையை நிருபிக்க வேண்டியிருப்பதே ஒரு விமர்சகனின் சாபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.