முதல் உலகப்போர் மருதன்

முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர்.

ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள் நீடித்தது. உலகப்போர் 1914 ல் தொடங்கினாலும் அதற்கு முந்தைய 50 ஆண்டுகளாகவே போருக்கான காரணங்கள் உருவாகி வந்து கொண்டிருந்தன‌. உதாரணமாக 1700 களில் இங்கிலாந்து முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றத் தொடங்கி அதில் கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற ஐரோப்பிய நாடுகளும் 1800 களில் அதனைப் பின்பற்றத் தொடங்கின. ஜெர்மனி இயந்திரமயமாதலை இங்கிலாந்துக்கு பின்னர் பல காலங்கள் கழித்துதான் தொடங்கியது. இருந்தாலும் அது மிக விரைவாக முன்னேறியது. அதனை மற்ற நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக இங்கிலாந்து. ஒவ்வொரு நாடும் மற்றோர் நாட்டின் வளர்ச்சியில் பீதியடைந்தது.மற்றோர் நாடு தங்களைவிட வள‌ரும் பொழுது தங்களுடைய நாட்டை அவர்கள் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் அருகிலுள்ள நாடுகளுக்கு உருவானது. குறிப்பாக இங்கிலாந்திற்கு. அதுவரை உலகின் ஆதிக்க சக்தியாக இருந்த இங்கிலாந்து அதனை விரும்பவில்லை.

இதனால் பதற்றம் அதிகமாகி அதிகமாகி ஒவ்வோர் நாடும் தன்னை மற்றோர் நாடு தாக்குமோ என்ற எண்ணத்திலேயே போருக்கு தயார் செய்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஒவ்வோர் நாடும் வேறு சில நாடுகளோடு சில ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொண்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. ஜெர்மனி ஆஸ்திரியா‍-ஹங்கேரியோடு சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அப்போது ஆஸ்திரியா-ஹங்கேரி ஒரே தேசம். பிரிந்திருக்கவில்லை. மறுபக்கம் இங்கிலாந்து,பிரான்ஸ்,ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டன. 1914 ல் ஆஸ்திரிய இளவரசர் செர்பிய இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டார். அந்தக் கொலை நடந்தது செர்பியாவின் சுயாட்சிக்காக. ஏனெனில் செர்பியாவை அப்போது ஆஸ்திரியா ஆண்டுவந்தது. இக்கொலைக்குப்பின்னர் ஆஸ்திரியா‍‍-ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியா ரஷ்யா உதவியை நாட, ஜெர்மனி ஆஸ்திரியாவுக்காக வந்தது. போர் தொடங்கி விட்டது.

முதல் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ்,ரஷ்யா போன்ற நேச நாடுகள் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அப்போர் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் பயங்கரமான‌ இழப்பையே கொடுத்தது. அதற்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளுக்கான நாட்டின் வளம் அந்த போரிலேயே செலவழிக்கப்பட்டு விட்டது. 150 ஆண்டுகால இங்கிலாந்தின் வல்லமை முடிவுக்கு வந்தது. பொருளாதார இழப்புகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை நிலை குலைய வைத்தது. உணவுப்பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டது.

முதல் உலக‌ப்போரில் ஆதாயம் அடைந்த ஒரே நாடு அமெரிக்கா. இருபக்க நாடுகளுக்குமே அமெரிக்கா ஆயுத வியாபாரம் செய்தது. போரின் ஆரம்ப காலத்தில் எந்த அணியிலும் சேராமல் இருந்தது அமெரிக்கா. அதனால் இருபக்க நாடுகளின் வணிகத்திலும் மிகப்பெரிய இலாபம் அடைந்தது. போரின் கடைசிக் கட்டத்திலேயே கலந்து கொண்டது. சேதமும் பெரிய அளவில் இல்லை. அதனால் போருக்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளின் ஐரோப்பா முழுவதும் சுணக்கம் கண்டபோது அமெரிக்கா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. உலக வல்லரசாக மாறியது.

முதல் உலகப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளின் மேலோட்டமான தொகுப்பு. மருதனால் எழுதப்பெற்றது. உலகப்போரைப் பற்றி ஏராளமான அடர்த்தியான புத்தகங்கள் ஒவ்வொரு நாட்டின் பார்வையிலும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இருப்பினும் ஓர் ஆரம்ப நிலைப் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த உலகப்போரின் வடிவத்தைக் கண்டுகொள்ள தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.