|

புதிய இந்தியா

16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் முந்தைய அதிபர் யானுகோவிச் ரஷ்யாவில் அடைக்கலமாக இருந்துகொண்டு அவர்களின் ஆதரவோடு உக்ரைனைப் பிரித்து ரஷ்யாவோடு இணைக்கும் செயல்களைச் செய்கிறார். இதற்கு மக்கள் விருப்பம், அந்தப் பகுதி மக்களின் முடிவு என்று ஜனநாயகக்காரணங்களை உலகுக்கு கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நம் நாட்டின் தேர்தலைப் பொறுத்தமட்டில் தோற்ற அனைத்து வேட்பாளர்களுமே, அனைத்துக் கட்சிகளுமே தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவே ஜனநாயகம். இதற்காகவே நாம் ஆயிரம் முறை பெருமைப்படலாம்.

ஆனால் நம் மனப்பாங்கு என்பது எப்பொழுதுமே ஒன்றைப் பற்றி அதீத ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் இருந்து விட்டு அது கிடைத்ததும் அதனை எதிர்பார்த்த அளவிற்கு விரும்பாமல் அடுத்த ஒன்றைப் பற்றிய அதீத ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதே. ஒருவேளை நாம் அதற்கே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

சரி, இப்போது மோடி தலைமையிலான அரசு தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு வழக்கம் போல நமது பத்திரிக்கைகளும், விமர்சகர்களும் முடிவு தெரிந்ததனால் ஆயிரம் விளக்கம் அளிப்பார்கள். எது எப்படியோ பாஜக வெற்றி பெற்றுவிட்டது. இதுதான் சாராம்சம்.

நாமோ வழக்கம் போல மோடி வெற்றி பெறுவார் என்று அதீதமாக விவாதித்து விட்டு வெற்றி பெற்றதும் அடுத்து அவருடைய செயல்பாடுகளினை பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். வழக்கம் போலவே மிகப்பெரிய மாற்றத்திற்கான எந்த செயலையும் நம்மளவில் செய்யாமல் மிகப்பெரிய மாற்றத்தை மட்டுமே எதிர்பார்க்கும் மனநிலை இருக்கும் வரை ஆயிரம் மோடி வந்தாலும் நாம் எதிபார்க்கின்ற அந்த மாற்றம் வரப்போவதில்லை.

மற்றொரு முக்கியமான ஒன்று நம்முடைய‌ சட்டென்று மாறக்கூடிய‌ மனநிலை. மக்களும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இதற்கு விதி விலக்கல்ல. இது இன்றைய நிலையில் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டு வருகிறது. உதாரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஆதரவு இருப்பது போலக் காட்டினர். சட்டென்று அவர்களின் செயல்பாடு சரியில்லை என மதிப்பீட்டை 100 லிருந்து 0 ஆக்கிவிட்டனர். இதில் பத்திரிக்கைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆம் ஆத்மியின் சரியில்லாத செயல்பாடுகள் என்னென்ன என்று அறியாமலேயே அவர்களின் மீதான மதிப்பை உயர்த்தியும் தாழ்த்தியும் மிகச் சொற்ப கால இடைவெளியில் மாற்றிக்கொண்ட பலருண்டு.

ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதற்கு அடுத்த நாட்களில் வெளிவந்த பத்திரிக்கை செய்திகளையும், தற்போது அதே டெல்லியில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் உள்ள போது வந்திருக்கக் கூடிய‌ செய்திகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் பத்திரிக்கைகளுடைய தலைகீழ் நிலைப்பாடு புரியும். மக்களும் அப்படியே, என்ன? மக்களின் அன்றைய மனநிலையை ஆவணப்படுத்தவில்லை. அதனால் நிருபிக்க வழி இல்லை.

அதற்கு அவர்களின் செயல்பாட்டினைக் காரணம் கூறினாலும் ஆம் ஆத்மியைத் தவிர்த்து வேறெந்த செய்தியை வேண்டுமானாலும் எடுத்து ஒரு பத்திரிக்கையின் முந்தைய பிந்தைய செய்திகளை ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும்.

சரி இதனை நாம் மோடி வெற்றியோடு எப்படி ஒப்பிடலாம்? பாஜக இந்திய அளவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் பல கட்சிகள் மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்திருக்கின்றனர். இனி இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளுடைய ஒரே பணி மோடி அரசை விமர்சனம் செய்வதே. மோடி அர‌சு செய்யும் சிறு பிழை கூட இந்திய அரசியல் கட்சிகளின் கழுகுப்பார்வையாலும், பத்திரிக்கைகளாலும் பெரிது படுத்தப்படும்.

மற்றொன்று இதுவரை எதிர்க்கட்சியாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் விளம்பரத்தை திட்டமிட்டு செய்து காங்கிரஸுக்கு எதிரான மனநிலையை சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டனர் பாஜகவினர். இனி அப்படியில்லை. அவர்கள்தான் செயல்படப்போகிறார்கள். இனியும் வெறுமனே விளம்பரத்தால் காலம் தள்ளமுடியாது.

மோடிக்கு மிகப்பெரிய அளவில் தனிப்பெரும்பான்மை வழங்கப்பட்டிருக்கிறது. அத‌னால் கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தல் இல்லாமல் தேசத்தின் நீண்டகால நலன் தொடர்பான செயல்பாடுகளை விமர்சனத்துகளுக்கு அப்பாற்பட்டு ராஜ்ய சபாவில் போதிய பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவோடு செய்ய வேண்டியதே அவர்களின் தலையாய பணி.

நாம் நம் வாழ்கைத்தரம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திப்பதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை நம் மீது வைத்து அதனை நோக்கி உழைப்பதை விடுத்து மோடி என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தை விடுவோம். இதுவே நம்முடைய‌ தலையாய பணி.

நன்றி.

Similar Posts

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • மாற்றத்தின் மாற்றம்

    எத்தகைய மாற்றத்தின் மீதும் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கின்றது. Facebook ஒட்டுமொத்த இணைய உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அதனுடைய ஒரு பகுதி சேவையை மட்டுமே தன் முழு சேவையாகக் கொண்டு கோலோச்சுகின்றது WhatsApp. See the slides below for details.

  • தமிழ் மலாய் சொல் அரங்கம்

    மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்றுள்ள நூல். மலாய் மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆய்வு நூல் இது. மொத்தம் 164 தமிழ்சொற்கள் நேரடியாகவும், 500 க்கும் மேலான‌ சொற்கள் 5 முதல் 10 விழுக்காடு திரிதலோடு மலாய் மொழியில் இன்றும் நடைமுறையில் இருப்பதை விளக்கியிருக்கின்றார். அதற்காகவே வணக்கங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வணிகத்தின் பொருட்டு கடல் கடந்து சென்ற தமிழர்களால் மலாய் மொழியின் இயல்பிலே கலந்துவிட்ட பல வார்த்தைகளுள்…

  • வாசிப்பு

    ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னள‌வில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும் அந்த இரண்டு விழுக்காட்டிற்குள் வரமாட்டார் என்று பல முறை நிதர்சனத்திலேயே உணர்ந்திருக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் நம் சமூகம், சுற்றம், பெற்றோர்…

  • | |

    கொரோனா தோல்வி

    கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு. முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே…

  • அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

    சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.  விரைவில் அரசு அதையும் அறிவிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன? இந்தியாவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.