புதிய தலைமுறை வார இதழில்

நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை.

Raa book review

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை சற்றேனும் நோக்கும் எவர் ஒருவரும் ஒரு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது என்பதை எளிதில் அறியலாம். உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றது. அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. அவ்வமைப்பினுடைய கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் பங்களிப்புகளை விளக்கும் புத்தகம் ‘இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது?’. குகன் அவர்களால் எழுதப்பெற்றது.1920 களில் ஆங்கில அரசுக்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்தமையால் இந்தியத் தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்களின் செயல்பாடுகளை முன் கூட்டியே அறிந்துகொள்ளவும் அதனை முறியடிக்கவும் 1921 ல் பிரிட்டீஷ் அரசு இந்திய புலனாய்வு அமைப்பு (Indian Political Intelligence) என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு ஆங்கிலேய அரசுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. அவ்வமைப்பு அரசுக்கு எதிராக செயல்படக்கூடியவர்களின் உளவுத்தகவல்களை திரட்டி அரசுக்கு அளித்து வந்தது.

பின்னர் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த அமைப்பு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இன்டெலிஜன்ஸ் பீரோ (Intelligence Bureau) என்ற பெயரில் இணைக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக சஞ்சீவி பிள்ளை பொறுப்பேற்றார். மகாத்மா காந்தியின் படுகொலைக்குப்பிறகு அதன் தலைவராக பி.என்.முல்லிக் பொறுப்பேற்றார். அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. ஐபி அதிகாரிகள் இந்தியாவைச் சுற்றியுள்ள சீனா, பர்மா,இலங்கை போன்ற எல்லை நாடுகளிலும், ஐரோப்பாவிலும் ரகசியமாக உளவுத்தகவல்களைத் திரட்டி வந்தனர்.

சுதந்திரம் அடைந்த முதல் இருபதாண்டுகளில் இந்தியா உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதிக கவனம் என்பதனை விட முழுக்கவனம் என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அக்காலகட்டத்திலேயே இந்தியாவின் அடிப்படைகள் கட்டமைக்கப்பட்டன. பிரதமர் நேருவும் வளர்ச்சியிலேயே அதிக கவனம் செலுத்தினார். சீனா மற்றும் பாகிஸ்தானோடு எல்லைகளில் பிரச்சினை இருந்தாலும் அது போர் வரை செல்லாது என நேரு உறுதியாக நம்பினார். அதனை அவர் பல உரைகளில் வெளிப்படுத்தவும் செய்தார். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சீனாவின் போர் திட்டமிடல் தொடர்பான எந்த வித தகவல்களும் ஐபியிடமிருந்து அரசுக்கு வரவில்லை. ஆனால் அதற்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டியிருந்தது. 1962 ல் சீனா இந்தியா மீது படையெடுத்தது. ஒருவேளை இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் தயாராக இருந்திருக்கலாம், அல்லது மேற்குலக நாடுகளிலிருந்து ஆயுத உதவி பெற்றிருக்கலாம்.  ஆனால் முடியாமல் போய்விட்டது.அதனைத் தொடர்ந்து 1965 ல் பாகிஸ்தான் படையெடுப்பு. இந்த இரு போர்களின் போதும் சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அதன்படி உள்நாட்டு உளவினை ஐபியும் வெளிநாட்டு உளவினை ராவும் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்திய ராவின் முக்கியமான வேலைகள், அண்டை நாடுகளில் நடைபெறும் அரசியல் ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது, கம்யூனிஸ்ட் நாடுகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பது, சீன,பாகிஸ்தான் ராணுவத்தினுடைய நவீன ஆயுதங்களைக் கண்காணிப்பது, சர்வதேச நாடுகளில் வாழக்கூடிய இந்திய சமூகத்தினைப் பயன்படுத்தி அந்தந்த நாடுகளில் இந்தியாவுக்கு சாதகமான அரசியல் அழுத்தங்களை உருவாக்குவது, மற்ற நாடுகளின் உளவு நிறுவன‌ங்களில் ஊடுருவி அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிவது போன்றவை. ராவின் தகவல்களுக்காக அவசியம் ஏற்பட்டால் முறைகேடான வழிகளிலும் தகவல் திரப்படும். பொதுவாக உளவு அமைப்புகளிலுள்ள முரண்பாடு என்பது எந்த உளவு அமைப்பும் மற்ற எந்த உளவு அமைப்பையும் முழுமையாக நம்பி விடாது. ஒரு உளவாளி மற்றொரு உளவாளியை கூட முழுமையாக நம்பிவிடக்கூடாது. இதுவே அவர்களுக்கான ஆரம்பப் பாடம். உதாரணமாக ராவுக்கு ஆரம்ப காலங்களில் அமேரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பயிற்சி அளித்தது. அதே சி.ஐ.ஏ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கும் பயிற்சி அளித்தது.

தனக்குத் தேவையான தகவல்களை ரா பல்வேறு வழிகளில் திரட்டுகிறது. Human Intelligence, Signal Intelligence, Financial Intelligence, Open Source Intelligence, Cyber Intelligence, Geo-spatial Intelligence என பல்வேறு தகவல்களுக்கு தனிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் ராவின் அடுத்த செயல்பாடு நிர்ணயம் செய்யப்படுகிறது. ரா நேரடியாக பிரதமருக்குக் கட்டுப்பட்டது. ராவிற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் செயல்பாடுகளைத் தனி நபர் கேள்வி கேட்க முடியாது.

ராவின் முக்கிய சாதனைகள்:

இந்தியாவுக்கு இருபுறமும் பாகிஸ்தான் இருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான்கள். அதனால் இந்தியா தன் இருபுறமும் ஓர் எதிரியை சந்திப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என ரா எச்சரித்திருந்தது. அதனால் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசத்திற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காக உதவி செய்ய இந்தியா நினைத்தது. அதனால் பங்களாதேஷில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியா மறைமுகமாக ஆதரவளித்தது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது தடை விதிக்க திட்டமிடப்பட்டது. அதன் மூலம் மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் உடனடியாகக் கிடைப்பதைத் தடுத்துவிட‌ முடியும். அப்படி செய்துவிட்டால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்,சீனா அல்லது இலங்கை வழியாகவே கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல முடியும். ஆனால் என்ன காரணத்தை சொல்லி தடைவிதிப்பது? இந்த பணி ராவிடம் ஒப்ப‌டைக்கப்பட்டது.

1971 ல் கங்கா என்னும் பெயர் கொண்ட இந்திய விமானம் ஹசிம் குரேஷி மற்றும் அஷ்ரஃப் என்பவர்களால் கடத்தப்பட்டது. டெல்லி பதறியது. கடத்தியவர்கள் பாகிஸ்தானிடம் தங்கள் விமானத்தை இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினர். இந்தியாவுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் தருவது பாகிஸ்தானுக்கு இனிப்பான விஷயம். அனுமதியளித்தார்கள். பாகிஸ்தானின் லாகூரில் விமானம் இறக்கப்பட்டது. இப்போது இந்தியா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யே இதற்து காரணம் என்றது. சில நாட்களில் பயணிகள் விடுவிக்கப்பட்டு அந்த விமானம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தியா இதனை உலகுக்கு எடுத்துக்காட்டியது. ஓர் இந்திய விமானம் எரிக்கப்பட்டுள்ளது, அதுவும் பாகிஸ்தானில். இந்தியா மீது பாகிஸ்தான் விமானங்கள் பறக்க இந்திரா காந்தி தடை விதித்தார். ஐ.எஸ்.ஐக்கு ஒன்றும் புரியவில்லை. ஐ.எஸ்.ஐயும் உலக அளவில் மிகச்சிறந்த உளவு நிறுவனமே. பின்னர் அது கடத்தியவர்களை விசாரித்ததில் தெரிந்தது கடத்தியவர்கள் இந்திய ரா உளவாளிகள் என்று. விளைவு பங்களாதேஷ் சுதந்திரம்.

இதனைப்போலவே சிக்கிமை இந்தியாவோடு இணைத்தது, 1974 பொக்ரான் இந்திய அணு ஆயுத சோதனையை ரகசியமாக அமெரிக்காவுக்குக் கூட தெரியாமல் நடத்திக்காட்டியது, 1988 ல் பாகிஸ்தானின் ராணுவ சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து ஏற்படுத்தியது, 1998 ல் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியது, இலங்கை, மாலத்தீவுகளிலும் இந்தியாவுக்கு ஏற்ற அரசியல்  மாற்றங்களை நிகழ்த்துவது, இந்தியப்பொருளாதாரத்தை சீர்குழைக்க நினைக்கும் கள்ள நோட்டுப் புழக்கத்தின் வேரினைக் கண்டறிந்து ஒழிப்பது என ராவின் பங்கு சுதந்திர இந்தியாவில் முக்கியமானது.

பின்னடைவுகள்:

1970 களின் பிற்பாதியில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து அவசர நிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் வந்த மொரார்ஜி தேசாய், நெருக்கடி காலகட்டத்தில் இந்திராகாந்தி தன் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க உளவு அமைப்புகளை  பயன்படுத்தினார் எனக் கூறி உளவு அமைப்புகளின் தலைவர்களை மாற்றினார். ராவுக்கான நிதியைக் குறைத்தார். ராவுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இக்காலகட்டம் ராவுக்கான சோதனைக்காலமாக இருந்தது. பின்னர் இரண்டு ஆண்டுகளில் மொரார்ஜி தேஜாய் அரசு கவிழ்ந்தது, அதன் பின்னர் ஆட்சியமைத்த சரண்சிங் அரசும் நீடிக்கவில்லை. பின்னர் 1980 தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெற்று இந்திரா காந்தி பிரதமரானார். ரா மீண்டும் புத்துயிர் பெற்றது.

பிழைகள்:

ராவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பினும் சில சம்பவங்களில் அவர்களும் கோட்டை விட்டார்கள். உதாரணமாக சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்து தாக்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியப் பிரதமரின் உயிரையே குடிக்கும் அளவிற்கு சென்றன. கனீஷா குண்டுவெடிப்பு சம்பவமும் அதன் தொடர்ச்சியே. மும்பைக் குண்டுவெடிப்பு மற்றுமோர் கருப்புப்பக்கம்.

அவர்களின் வெற்றியில் பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் அவர்களின் தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் என்னதான உலகின் வல்லமை படைத்த சி.ஐ.ஏ வாகவே இருந்தாலும் அவர்களாலேயே 09/11 தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போது எதிரி அணியில் இருப்பவர்களும் உளவாளிகளுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லை என்பதே உண்மை.

ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை. தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் கூடாது, வெற்றியையும் கொண்டாடவும் கூடாது. ஒரு மிகப்பெரும் ஆபத்தை வெற்றிகரமாக முறியடித்துவிட்டிருந்தாலும் அதனைப்பற்றி எதுவும் பேசாமல் அடுத்த வேலைக்கு சென்று விட வேண்டும். சில சமயங்களில் தங்களுடைய உளவு அதிகாரி மாட்டிக்கொண்டு விட்டால் அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது என்று கூற வேண்டியிருக்கும். உதாரணம் ரவீந்தர் கௌசிக்.

கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையிலேயே ராவின் செயல்பாடுகளை நாம் ஒரளவிற்கு அறிந்துகொள்ள முடியும். மற்ற நாடுகளின் உளவு நிறுவன‌ங்கள் ராவின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், நீண்ட காலம் கடந்த பின்னர் வெளிவரும் தகவல்கள் போன்றவற்றின் அடிப்படையில் குகன் ராவைப்பற்றி இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன. உதாரணமாக இந்திய ரா அமைப்பிற்கு ஆட்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவது கிடையாது. மற்ற பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் நபர்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அவர்கள் ரகசியமாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். பெரும்பாலும் ஐபி, ராணுவத்திலிருந்தே ஆட்களை முக்கியமான பணிகளுக்குத் தேர்வி செய்வார்கள். அதன் முக்கியமான காரணம் ஒருவேளை எதிரியிடம் அகப்பட்டுக்கொண்டால் எந்தத் தகவலையும் அளிக்கமுடியாமல் இருக்கக் கூடிய பயிற்சி அவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் என்பதுதான். அத்தோடு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே ஒரு ரா அதிகாரியைத் தேர்வு செய்வார்கள் என்பது போன்றவை.

ரா அமைப்பைப் பற்றியோ இல்லை உலக உளவு அமைப்புகளைப் பற்றியோ தெரிந்து கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய ஆரம்பமாக இப்புத்தகத்தினைக் கொள்ளலாம்.

நன்றி.

1 thought on “புதிய தலைமுறை வார இதழில்

Leave a Reply to சுரேந்தர் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.