|

சூல் ‍- சோ.தர்மன்

Sool – So.Darman

2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தொடங்கி சுதந்திரத்திற்குப் பிந்தைய ஜனநாயக அரசுகள் வரையிலான காலகட்டத்தினை ஒட்டிய ஒரு சுற்று வட்டார கிராமங்களின் கதை.

ஒட்டுமொத்த கதையும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தினை ஒட்டி அமையும் கதை அல்ல இது. கிராமங்களில் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களும் அதற்கு முந்தைய பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுமாக அமைந்த நாவல். ஒரு நீர்ப்பாய்ச்சியும், ஒரு கண்மாயுமே கதையின் மையம். கண்மாயின் நீரை அக்கண்மாய்க்குப் பாத்தியப்பட்ட வயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்பவனே நீர்ப்பாய்ச்சி.

ஒரு கண்மாய் எப்படி ஒரு மிகப்பெரிய சூழியல் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது, அதனை சுதந்திர இந்தியா எப்படி ஒற்றைப்படையாக மாற்றி அழித்தது என்பதனை இந்நாவலை வாசிக்கும் பொழுது ஒருவர் உணரக்கூடும். கிராமத்தினையும் அதனைச் சுற்றிய பகுதிகளையும் மையமாகக் கொண்டதால் சில நபர்கள் பல இடங்களில் வருவதும் போவதும் உண்டு. இயல்பாக மக்களிடம் இருந்த அறவுணர்வு எப்படி இல்லாமலாகியது என்பதை ஒரு சரடாக நாவல் முன்வைத்துக்கொண்டே செல்கிறது. இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய கிராமங்களில் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த நேர்மை, எத்தகைய வறுமையிலும் அறம் தவறாமை பின்னர் வந்த காலங்களில் எப்படி இல்லாமலாகியது? எப்படி எல்லாவற்றையும் பணம் ஈடு செய்கிறது? போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி வைக்கிறது இந்நாவல்.

இந்நாவலில் நான் மிக விரும்பிய இரண்டு விஷ‌யங்கள். ஒன்று கிராமத்து பேச்சு வழக்கு. கிராமத்து வாழ்வினை முற்றிலும் வாழ்ந்து அதனை உன்னிப்பாக நோக்கிய ஒருவராலேயே இத்தனை நுட்பமாக எழுத முடியும். அது இந்நாவலின் பலம். மற்றொன்று கிராமத்து எளிய மக்கள் பேசிக்கொள்ளும் இரட்டை அர்த்த வசனங்கள். வேலையின் அலுப்பு தெரியாமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க, மற்றொருவரோடு இன்னும் நெருக்கமாக எனப் பல காரணங்கள் உண்டென்றாலும் இந்நாவலில் உள்ள அவ்வரிகள் கிராமத்துப் பேச்சுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஊழல் பெருத்து, நேர்மை அற்றுப் போவதை மிக ஆழமாகப் படம்பிடிக்கும் நாவல், அதற்கு முந்தைய வெள்ளையர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் செய்த கொள்ளைகளைப் பற்றியும் பேசாமலேயே கடந்து சென்று விடுகிறது. எழுத்தாளரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், எனக்குத்தோன்றும் ஐயப்பாடு என்பது பெரும்பாலும் நாவல் முழுவதும் வெள்ளையர்கள் வந்து போகிறார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் அவர்களைப் பற்றிய மற்ற விசயங்கள்தான் பேசப்படுகின்றன. அவர்களின் ஊழல்களும், அவர்களின் கொள்ளைகளும், அடக்குமுறைகளும் முற்றிலுமாகப் பேசப்படாமலேயே கடந்துசெல்லப்படுகிறது. அதுவே இந்திய ஜனநாயக அமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நபர் கதையில் வரும்பொழுது அவரின் அக்கிரமங்களும், அநியாயங்களும் அதிகமாகப் பேசப்படுகின்றன. இது எனக்கு முரண்பாடாகத் தெரிந்த ஒன்று.

சூல் என்பதற்கு கரு என்னும் பொருள். இநாவலின் நிறை கண்மாயே சூல். எல்லாவற்றையும் உருவாக்கி வளர்த்தெடுக்கும் சூல். நாவலின் பல்வேறு தருணங்களில் நம்மை மயிர் கூசச்செய்யும், கண்ணிர்த் துளியை வரவழைக்கும் ப‌ல‌ சம்பவங்கள் உண்டு. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

Similar Posts

  • தேவை பஜ்ரங்கி பைஜான்கள்

    சமீபத்தில் மீண்டும் ஒருமுறை பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை பார்த்தேன். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இந்திய சினிமா ஆற்றிய பயன் என்று பார்த்தால் அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவே என்பது என் எண்ணம். 95 விழுக்காடு சீர்கேடே. இது இல்லையென்றால் செழிப்போடு இருந்திருப்போம் என்ற பொருளிலல்ல, இல்லாமலிருந்திருந்தால் இத்தனை விரைவாக இத்தனை மோசமாக ஆகியிருக்க மாட்டோம் என்ற பொருளில். சமூகத்தின் பெரும்பகுதி சீரழிந்து விட்டது என்ற பொருளில‌ல்ல, சீரழிவின் பெரும்பகுதி சினிமாவால் என்ற பொருளில். நூற்றில் ஐந்து திரைப்ப‌டங்கள் சமூகத்தின்…

  • The Naked Ape – Desmond Morris

    1969 ஆம் ஆண்டு Desmond Morris என்ற ஆங்கில ஆய்வாளரால் எழுதப்பெற்ற புத்தகம். மனிதனை ஒரு மிருகமாக மட்டுமே பாவித்து அதன் செயல்பாடுகள், அதனை ஒத்த மற்ற மிருகங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை விளக்கும் நூல். அதனை ஒத்த மற்ற மிருகங்களிலிருந்து மயிர் இல்லாமல் இருப்பதே முதலில் புலப்படுவதால் இதற்கு “The Naked Ape” எனப் பெயரிட்டிருக்கிறார். உதாரணமாக இந்த மிருகம் வலிமையான கரங்களை உடையதாக இல்லாமல் இருந்தாலும் வலிமையான ஆயுதத்தை தன் கரங்களில் ஏந்தி எதிர்க்கும்…

  • |

    சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

    நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும்,…

  • |

    அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011. அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை ஜாகிர் நாயக் குரான் மற்றும் பிற அறிவியல் இதழ்களின் ஆதாரம் கொண்டு விவரிக்கிறார். ஸவேரி அவர்களின் உரைவடிவம் இப்புத்தகத்தில் இல்லையாதலால்…

  • ஃபாரன்ஹீட் 451

    கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது. மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.