|

சூல் ‍- சோ.தர்மன்

Sool – So.Darman

2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தொடங்கி சுதந்திரத்திற்குப் பிந்தைய ஜனநாயக அரசுகள் வரையிலான காலகட்டத்தினை ஒட்டிய ஒரு சுற்று வட்டார கிராமங்களின் கதை.

ஒட்டுமொத்த கதையும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தினை ஒட்டி அமையும் கதை அல்ல இது. கிராமங்களில் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களும் அதற்கு முந்தைய பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுமாக அமைந்த நாவல். ஒரு நீர்ப்பாய்ச்சியும், ஒரு கண்மாயுமே கதையின் மையம். கண்மாயின் நீரை அக்கண்மாய்க்குப் பாத்தியப்பட்ட வயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்பவனே நீர்ப்பாய்ச்சி.

ஒரு கண்மாய் எப்படி ஒரு மிகப்பெரிய சூழியல் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது, அதனை சுதந்திர இந்தியா எப்படி ஒற்றைப்படையாக மாற்றி அழித்தது என்பதனை இந்நாவலை வாசிக்கும் பொழுது ஒருவர் உணரக்கூடும். கிராமத்தினையும் அதனைச் சுற்றிய பகுதிகளையும் மையமாகக் கொண்டதால் சில நபர்கள் பல இடங்களில் வருவதும் போவதும் உண்டு. இயல்பாக மக்களிடம் இருந்த அறவுணர்வு எப்படி இல்லாமலாகியது என்பதை ஒரு சரடாக நாவல் முன்வைத்துக்கொண்டே செல்கிறது. இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய கிராமங்களில் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த நேர்மை, எத்தகைய வறுமையிலும் அறம் தவறாமை பின்னர் வந்த காலங்களில் எப்படி இல்லாமலாகியது? எப்படி எல்லாவற்றையும் பணம் ஈடு செய்கிறது? போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி வைக்கிறது இந்நாவல்.

இந்நாவலில் நான் மிக விரும்பிய இரண்டு விஷ‌யங்கள். ஒன்று கிராமத்து பேச்சு வழக்கு. கிராமத்து வாழ்வினை முற்றிலும் வாழ்ந்து அதனை உன்னிப்பாக நோக்கிய ஒருவராலேயே இத்தனை நுட்பமாக எழுத முடியும். அது இந்நாவலின் பலம். மற்றொன்று கிராமத்து எளிய மக்கள் பேசிக்கொள்ளும் இரட்டை அர்த்த வசனங்கள். வேலையின் அலுப்பு தெரியாமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க, மற்றொருவரோடு இன்னும் நெருக்கமாக எனப் பல காரணங்கள் உண்டென்றாலும் இந்நாவலில் உள்ள அவ்வரிகள் கிராமத்துப் பேச்சுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஊழல் பெருத்து, நேர்மை அற்றுப் போவதை மிக ஆழமாகப் படம்பிடிக்கும் நாவல், அதற்கு முந்தைய வெள்ளையர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் செய்த கொள்ளைகளைப் பற்றியும் பேசாமலேயே கடந்து சென்று விடுகிறது. எழுத்தாளரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், எனக்குத்தோன்றும் ஐயப்பாடு என்பது பெரும்பாலும் நாவல் முழுவதும் வெள்ளையர்கள் வந்து போகிறார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் அவர்களைப் பற்றிய மற்ற விசயங்கள்தான் பேசப்படுகின்றன. அவர்களின் ஊழல்களும், அவர்களின் கொள்ளைகளும், அடக்குமுறைகளும் முற்றிலுமாகப் பேசப்படாமலேயே கடந்துசெல்லப்படுகிறது. அதுவே இந்திய ஜனநாயக அமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நபர் கதையில் வரும்பொழுது அவரின் அக்கிரமங்களும், அநியாயங்களும் அதிகமாகப் பேசப்படுகின்றன. இது எனக்கு முரண்பாடாகத் தெரிந்த ஒன்று.

சூல் என்பதற்கு கரு என்னும் பொருள். இநாவலின் நிறை கண்மாயே சூல். எல்லாவற்றையும் உருவாக்கி வளர்த்தெடுக்கும் சூல். நாவலின் பல்வேறு தருணங்களில் நம்மை மயிர் கூசச்செய்யும், கண்ணிர்த் துளியை வரவழைக்கும் ப‌ல‌ சம்பவங்கள் உண்டு. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

Similar Posts

  • உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

    மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை…

  • |

    பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

    சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன். ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது. ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” பார்வதி, திருநெல்வேலி நாஞ்சில் நாடன்: ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி,…

  • சொர்க்கத்தின் குழந்தைகள்

    சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான். இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில்…

  • |

    இன்னும் மீதமிருக்கிறது

    சிங்கப்பூரில் வாழும் சத்திக்கண்ணனால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகம். பெரும்பாலானவை வசனக்கவிதைகள். ஒரு சில முத்தாய்ப்பான கவிதைகளும் உண்டு. உதாரணமாக மனைவியைப்பற்றிய கவிடையொன்றில் எல்லாவற்றையும் தூரமாகத்தெரிந்தால் அழகென்றிருந்த எனக்கு அருகில் மலர் நீ இருக்கும் போது என்ன செய்ய?  என்னும் கவிதை அழகு. வானவில், கனவு போன்றவை நான் ரசித்த கவிதைகள். நான் ரசிக்காதது முன்னுரை எழுதியிருப்பவர் பாடியிருக்கும் துதி.

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.