| | |

BackStage – Montek Singh Ahluwalia

மான்டெக் சிங் அலுவாலியா அவர்களால் எழுதப்பெற்று 1990 களில் இந்தியா மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்தங்களைப் ப‌ற்றி விரிவாக விவரிக்கும் புத்தகம். இந்திய வரலாற்றையும், பொருளாதாரத்தையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

பெரும்பாலும் தனி நபர் நினைவிலிருந்து எழுதக்கூடிய புத்தகங்கள் எல்லாம் அவர்களைப் பற்றிய மற்றும் அவர்களைச் சுற்றி நடைபெற்ற‌ நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருக்கும். அத்தகைய ஒரு புத்தகத்தினை எழுதுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறிவிட்டே புத்தகத்தினை தொடங்குகிறார் அலுவாலியா. இந்த புத்தக்கத்தினை வாசித்து முடிக்கும்பொழுது அவர் கூறியபடி தற்புகழ்ச்சி இல்லாமலேயே இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்பதனை அறியலாம். அவருடைய கல்வி, வேலை, திருமணம் என சுருக்கமாகக் கூறிவிட்டு இந்திய அரசின் கீழ் தன் பணியைத் தொடங்கியது, அப்போதைய பொருளாதார சூழ்நிலைகள் என விவரிக்கத்தொடங்கி விடுகிறார். தற்பெருமை சுத்தமாக இல்லாத இந்தப் புத்தகத்தில் அவர் கையாண்ட மற்றும் பங்கேற்ற பொருளாதார சிக்கல்கள், அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள், சில வருடங்களுக்குப் பிந்தைய‌ அதன் பலன்கள் ஆகியவற்றை மொத்தமாக பார்க்கும்பொழுது எத்தனை சவால்களை இந்திய தேசம் கடந்து வந்திருக்கிறது அதற்கு எத்தகைய உழைப்பை அலுவாலியா போன்றவர்கள் அளித்திருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான சீர்திருத்த நடவடிக்கைகள் சாதாரண மக்களுக்கு எளிதில் நேரடியாக புரியாதவை அல்லது உடனடிப் பலன் தராதவை. அத்தகைய செயல்களை அரசியல்வாதிகள் பெரும்பாலும் செய்ய விரும்புவதில்லை. தன் தேசத்தின் வளர்ச்சி மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டுள்ள சிலராலேயே இது போன்ற மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1990 களில் செய்த சீர்திருத்தங்களின் பலன் 20 ஆண்டுகளுக்குப்பின்னரே உண்மையான விளைவைக் கொண்டுவந்தது. “History will be kinder to me than media” என்று மன்மோகன் சிங் கூறியதன் உண்மையை நம்மால் இப்போது புரிந்து கொள்ளமுடிகிறது.

இன்றைய பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பிறந்த அலுவாலியாவின் தந்தை ராணுவ கணக்காளர். தந்தையின் பணி காரணமாக செகந்திராபாத்திற்கு 1950 ல் குடிபெயர்ந்தனர். 1960 ல் அமெரிக்கா சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக‌த்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அலுவாலியா 1971 ல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள். பின்னர் 1979 ல் மன்மோகன் சிங் அவர்களின் ஆலோசனையின் பெயரில் இந்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பித்து அதன் பொருட்டு இந்தியா திரும்பினார்.

இந்தியாவின் பொருளாதாரச் சிக்கல்கள் 1960 களிலேயே தீவிரமடையத் தொடங்கியிருந்தன. அக்காலகட்டத்தில் இந்தியா உலக அளவில் அதிகம் நிதி உதவி பெறக்கூடிய தேசமாகவே இருந்து வந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு நிரந்தர பரிமாற்ற விலையைக் கொண்டிருந்தது. அதாவது சந்தையின் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் இருக்காது. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள பரிமாற்ற விலையின்படியே இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான‌ பரிமாற்றம் நடைபெறும். இதனால் இந்திய ரூபாயின் உண்மையான சந்தை மதிப்பு என்பது ரிசர்வ் வங்கியின் மதிப்பைவிட குறைவாகவே இருந்தது. அத்தோடு இறக்குமதி ஏற்றுமதி மீதான அதீத கட்டுப்பாடுகளால் அந்நிய செலாவணிக் கையிருப்பும் சராசரியாகக் குறைந்து கொண்டே வர, 1980 களின் இறுதியில் பற்றாக்குறை அதன் உச்சத்தை அடைந்தது. 1991ல் குவைத் மீதான ஈராக்கின் படையெடுப்பு கச்சா எண்ணெய் விலையை உலக சந்தையில் அதிகரிக்க, இந்தியாவின் அந்நியச்செலாவணி இன்னும் மோசமாகியது. உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது. அத்தோடு இந்திய‌ அரசியல்களமும் பல்வேறு கட்சிகளின் ஆட்சிகளால் நிலையற்ற தன்மையிலும் இருந்ததால் துணிச்சலான நடவடிக்கைகள் எடுப்பது இன்னும் சிரமமானது.

இந்த சூழ்நிலைகளில் 1991 ல் நரசிம்மராவ் தலைமையிலான அரசு அமைந்ததும் மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது நிதித்துறையின் கீழ் செயலராக மாண்டெக் அமர்த்தப்பட்டார். அப்பொழுது முதல் செய்த சீர்திருத்தங்களைப் பற்றியே விரிவாக விவரிக்கிறது இப்புத்தகம்.

அப்போது எடுக்கப்பட்ட சில முக்கியமான சில சீர்திருத்தங்கள்

  1. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் பெருமளவு நீக்கப்பட்டன. அது வரை இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாது. அத்தோடு அதற்கான அனுமதி பெறுவது என்பதும் எளிதான காரியம் அல்ல. அத்தோடு ஒருவர் வாங்கிய அனுமதியை, தன‌க்குத் தேவையில்லையெனில் மற்றவருக்கு கொடுக்கவும் முடியாது. இவ்வனுமதி முறை நீக்கப்பட்டு ஏற்றுமதி செய்யக்கூடிய மதிப்பில் 30 விழுக்காட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதனை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். இந்திய அரசைப் பொறுத்தமட்டில் 30 விழுக்காட்டிற்கு மேல் இறக்குமதி கட்டுப்படுத்தப்படும்.
  2. இந்திய ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு குறைக்கப்பட்டது. இதற்கான முக்கிய காரணங்கள் இந்திய ரூபாய் மீதான நம்பகத்தன்மையை அதிகரிப்பது. இறக்குமதியை சவாலானதாக‌ மாற்றி உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பது. ஏற்றுமதியை இலாபகரமானதாகவும், உலக நாடுகளுக்கு விலைக்குறைவாகவும் ஆக்குவது.
  3. பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 18லிருந்து 8 ஆக குறைக்கப்பட்டது. அதனால் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  4. அதிகபட்ச கலால் வரி 300 விழுக்காட்டிலிருந்து 150 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. நிறுவனங்களுக்கான வரி 40 லிருந்து 45 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
  5. 10 தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  6. 1992 ல் இரண்டு விதமான பண பரிமாற்ற முறை அமல்படுத்தப்பட்டது. 40 விழுக்காடு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விலையிலும், 60 விழுக்காடு சந்தை விலையிலும் என. 1993 ல் முற்றிலுமாக சந்தை விலை அமல்படுத்தப்பட்டது.

இவை மட்டுமல்லாமல் இன்னும் பல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன‌.இதனைத் தொடர்ந்து வந்த ஐக்கிய முன்னனி அரசும், தேசிய ஜனநாயக் கூட்டணி அரசும் சீர்திருத்த நடவடிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்தன. அதன் பின்னர் வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் இந்தியப்பொருளாதாரம் அதன் அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர்கள் மன்மோகன் சிங், நரசிம்மராவ், மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர்.

வாசிக்க வேண்டிய புத்தகம்.

Similar Posts

  • |

    The Core

    2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் Jon Amiel. நடிப்பு Aaron Eckhart, Hilary Swank மற்றும் பலர். சில நகரங்களில் நடைபெறும் சில‌ விசித்திர நிகழ்வுகளால் ஆச்சரியமடையும் Dr.Josh Keyes மற்றும் Dr.Serge Leveque இருவரும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமே இதற்கான காரணம் என அறிகிறார்கள். காந்தப்புல மாற்றத்திற்கான‌ காரணம் பூமியின் ஆழ் மையத்தில் உள்ள உலோக குழம்பு சுழல்வதை நிறுத்தியதே எனவும், அது பூமியின் நிலைத்தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்,…

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

    மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை…

  • Fail Fast Fail Often

    ரியான் பாபினக்ஸ் மற்றும் ஜான் க்ரும்போட்ஸ் என்ற இருவரால்  எழுதப்பெற்ற சுய முன்னேற்ற புத்தகம் Fail Fast Fail Often. தற்போதைய அறிவியல் உலகின் செயல்பாடுகளின் தாரக மந்திரம் என்பது உடனடி செயல்பாடு, பின்னர் மேம்பாடு என்பதே. இதுவே கூகுள், ஃபேஸ்புக் போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் இன்றைய செயல்முறை. அதாவது முற்றிலும் திட்டமிட்டு அல்லது முழுமையாக தயார் செய்துவிட்ட பின்னர்தான் ஒரு செயலைத் தொடங்கவேண்டும் என்ற செயல்பாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல என நிறுவப்பட்டு விட்டது. அதனால் உடனடியாக…

  • |

    இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். ஆன்மீக உரிமைகள்பொருளாதார உரிமைகள்சமூக உரிமைகள்கல்வி உரிமைகள்சட்ட உரிமைகள்அரசியல் உரிமைகள் இவற்றைப் ப‌ற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக…

  • சித்தி

    சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு பழைய திரைப்படத்தின் காட்சி ஒளிபரப்பானது. அந்தக் காட்சியில் தன் வீட்டு வறுமையை தன் தம்பிக்கு தெரியாமல் மறைப்பாள் அக்கா. தம்பியை டாக்டராக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருக்கும். அந்த அக்கா பத்மினி, தம்பி முத்துராமன். அப்படத்தின் பெயர் தெரியாததால் என் அம்மாவிடம் காட்சியை விளக்கிக் கேட்டேன். பட்டென்று பதில் வந்தது, சித்தி என்று. அப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எஸ். வாசன் அவர்களின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இசை எம்.எஸ்.விஸ்வநாதன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.