சொர்க்கத்தின் குழந்தைகள்

சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான்.

இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில் எழுதி பேசிக்கொள்கிறார்கள். மறுநாள் எப்படி பள்ளிக்கு செல்வது என சாரா கேட்கிறாள். அவளுக்கு காலையில் பள்ளி என்பதால் தன் ஷூவை அணிந்துகொண்டு செல்லும்படியும் அவள் திரும்பி வந்தபின்னர் தான் ஷூவை அணிந்துகொண்டு செல்வதாகவும் கூறுகிறான். அது தனக்கு மிகவும் பெரியதாக இருக்கும் எனவும் அதனைப் போட்டுக்கொண்டு தன்னால் விரைவாக நடக்க முடியாது எனவும் கூறுகிறாள். அலி கெஞ்சிக் கேட்கவே சம்மதிக்கிறாள்.

அதன்படி சாரா தினமும் பள்ளி முடிந்ததும் விரைந்து ஓடி வருகிறாள். அலி வழியில் அவளுக்காக காத்து நிற்கிறான். ஷூவை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியே சில நாட்கள் கடக்கிறது. அலி தினமும் பள்ளிக்கு ஓடுகிறான். என்னதான் அலி விரைவாக ஓடினாலும் பள்ளிக்கு தாமதமாகச் செல்கிறான். முதலிரு நாட்கள் மன்னிக்கும் தலைமையாசிரியர் மூன்றாவது நாள் அவனை பெற்றோரை அழைத்து வரும்படி சொல்கிறார். தன் தந்தைக்கு தெரிந்துவிடும் எனப் பயப்பட்டு அழுகிறான். அங்கு வரும் அவனது வகுப்பு ஆசிரியர் அவன் வகுப்பில் ந‌ன்றாக படிக்கும் மாணவன் எனவும் தனக்காக அவனை மன்னிக்கும்படியும் கூறுகிறார். அலி யாரிடமும் உண்மையை கூறாமல் மறைக்கிறான். அலிக்கும் சாராவுக்கும் ஒற்றை ஷூ என்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

பின்னர் ஒருநாள் தன்னுடைய ஷூவை பள்ளியில் வேறோர் மாணவி அணிந்திருப்பதை சாரா பர்க்கிறாள். அண்ணனிடம் சொல்லி இருவரும் அவளைப் பின் தொடர்ந்து சொல்கிறார்கள். அங்கே அவர்கள் அம்மாணவியின் தந்தை கண் தெரியாதவராக இருப்பதைப் பார்த்துவிட்டு ஷூவைக் கேட்காமல் வந்துவிடுகிறார்கள்.

இச்சமயத்தில் அலியின் அப்பாவுக்கு அவருடைய முதலாளி ஒரு புல் வெட்டும் கருவியைத் தருகிறார். அதனைக் கொண்டு நகரத்தின் உயர்குடியினர் வாழும் பகுதிக்கு வேலை தேடி தந்தையோடு விடுமுறை நாளில் செல்கிறான் அலி. அங்கே தோட்ட வேலை செய்வதால் அவனுடைய அப்பாவுக்கு பணம் கிடைக்கிறது. அது அவர் ஒரு வாரம் செய்யும் வேலைக்கான கூலி எனவும், ஒரே நாளில் கிடைத்து விட்டதாகவும் கூறுகிறார். திரும்ப வரும்பொழுது அலியிடம் என்ன வேண்டுமெனக் கேட்கிறார். அலி தங்கைக்கு ஒரு புது ஷூ வாங்கலாம் என்று கூறுகிறான். ஆனால் திடீரென்று அவர்கள் சைக்கிள் ப்ரேக் பிடிக்காமல் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். மருத்துவமனையில் அனைத்து பணமும் செலவாகி விடுகிறது.

மற்றோர் நாள் பள்ளியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றிற்கான அறிவிப்பு வெளியாகிறது. தன்னிடம் நல்ல ஷூ இல்லாததால் அதில் கல‌ந்து கொள்ளாமல் போகும் அலி, பின்னர் அதில் இரண்டாம் இடம் பெற்றால் பரிசு ஷூ எனத் தெரிந்ததும் கலந்து கொள்கிறான். தன் தங்கையிடம் தான் அதில் வெற்றி பெற்று விடுவேன் என்றும் அதனைக் கடையில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சாராவுக்கு ஒரு ஷூ வாங்கித் தருவதாகவும் சொல்கிறான். ஆனால் அவன் முதலாவதாக வந்து விடுகிறான். தனக்கு இரண்டாம் இடம் கிடைக்கவில்லை என்றதும் அழுகிறான் அலி.

வீட்டிற்கு வரும் அலி தன் தங்கையிடம் தன்னால் இரண்டாம் இடத்திற்கு வர முடியவில்லை எனக் கூறுகிறான். சாரா என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்கிறாள். அதற்குள் அம்மா அழைக்கவே ஓடிப்போகிறாள். வருத்தத்தோடு அலி அமர்கிறான். அதே சமயத்தில் அலியின் அப்பா அலி கூறியதை நினைவில் வைத்திருந்து இருவருக்காகவும் புது ஷூக்களை வாங்குகிறார். அத்தோடு படம் நிறைவைடைகிறது.

மீண்டும் உண்மைக்கு அருகில் ஒரு திரைப்படம். இந்த திரைப்படம் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக மக்களுக்குத் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டது. ஒண்ணரை மணி நேரம் திரைப்படம். முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை அத்துனை இயல்பு. அலியாக நடித்திருக்கும் ஆமீர் ஃபரூக் ஹாசிமியனும், சாராவாக நடித்திருக்கும் ஃபகாரே சித்திகிவும் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சாரா தன்னுடைய ஷூவை இன்னொரு மாணவி அணிந்திருப்பதைப் பார்த்ததும் அடுத்த இடைவேளைகளில் அனைவருடைய கால்களையும் பார்த்துக் கொண்டே செல்லும் காட்சி, சாரா தாமதமாக வந்த பின்னர் அலி திட்டும் பொழுது உன்னால் தான் இதெல்லாம் நான் அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என்று சொல்லும் சாராவிடம் “போய் சொல்லு அவங்களாலே வாங்கித்தர முடியாது பாவம்!” என அப்பா அம்மாவுக்காக அலி பேசும் காட்சி என் பெரும்பாலும் மனதை நெருட வைக்கும் காட்சிகள். அருமையான ஒரு பதிவு.

Similar Posts

  • |

    என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் – எம்.ஏ.அப்பாஸ்

    எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா கார்க்கி – ரஷ்யா T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து ஹெமிங்வே – அமெரிக்கா ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து அல்பட்டோ மொறாவியா –…

  • Words at Work

    இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது. எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது…

  • Captain Phillips (film)

    Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர்  Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான‌ Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  Barkhad Abdi. தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக்…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • |

    The Psychology of Money – Morgan Housel

    Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார். பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.