A Separation – Movie
A Separation என்ற ஈரானிய திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ஆஸ்கர் ஃபர்காதி இயக்கம். முக்கிய கதாபாத்திரங்கள் பேய்மன் மோடி,லைலா ஹடாமி,ஷாகப் ஹூசைனி.
நாதெர், சிமென் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுவதிலிருந்து கதை தொடங்குகிறது. சிமென் தான் தன் மகளின் எதிர்காலத்துக்காக ஈரானை விட்டு வெளிநாடு செல்ல வேண்டுமெனவும், ஆனால் நாதெர் தன்னுடன் வர மறுப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டுமெனக் கேட்கிறாள். இல்லையெனில் தன் மகளைத் தன்னுடன் அனுப்பும்படி கேட்கிறாள். நாதெர் தன்னுடைய தந்தையை விட்டு தன்னால் வர முடியாது என்கிறான். நீதிபதி இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.
அதன் பின்னர் சிமென் கோபித்துக்கொண்டு இனி தான் திரும்பி வரப்போவதில்லை எனக்கூறி விட்டு சென்றுவிடுகிறார். அவர்களின் மகள் டெர்மி தந்தையோடு தங்கி விடுகிறாள். டெர்மி பள்ளி மாணவி. நாதெரின் அப்பா அல்சமீர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த ஒரு விஷயமும் நினைவில் தங்காதவர். அதனால் தானும் தன் மகளும் சென்றபின்னர் அவரைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு பணிப்பெண்ணை வேளைக்கு அமர்த்துகிறார் நாதெர். அப்பணிப்பெண் ஓர் கர்ப்பிணி. அவளுக்கு ஒரு 4 வயது பெண் குழந்தை இருக்கிறது. அவள் தன் கணவனுக்குத் தெரியாமல் தன் குழந்தையோடு இங்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறாள். தன் கணவன் ஒரு நோய்வாய்ப்பட்ட முதியவருக்கு பணிவிடை செய்வதை அனுமதிக்கமாட்டான் என்பதால் அவள் இப்படி செய்கிறாள்.

இந்நிலையில் ஒருநாள் அப்பணிப்பெண் வீட்டில் முதியவரை வைத்துவிட்டு வெளியில் சென்று விடுகிறாள். அவள் திரும்பி வருவதற்குள் நாதெர் வந்துவிடுகிறான். அவனுடைய அப்பா கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறார். கோபமடையும் நாதெர் வேலைக்காரியைத் தேடுகிறான். அவள் இல்லை, அத்தோடு நாதெருடைய பணமும் காணாமல் போயிருக்கிறது. இவை எல்லாவற்றாலும் விரக்தியடைகிறான் நாதெர். சிறிது நேரத்தில் பணிப்பெண் வருகிறாள். கோபமடையும் நாதெர் அவளை வேலையை விட்டு போகச் சொல்கிறான். அத்தோடு அவள் திருடிவிட்டதாகவும் சொல்கிறான். அதனால் கோபமடையும் அப்பணிப்பென் தன்னை திருடி இல்லை எனக்கூறினால்தான் செல்வேன் என விவாதம் செய்ய அவளை வெளியே தள்ளுகிறான் நாதெர். மாடிப்படிக்கட்டுகலில் தடுமாறி கீழே விழும் அவள் தன் மகளோடு வெளியேறுகிறாள். பின்னர் நாதெரின் மனைவியிடம் போய் தான் திருடியில்லை எனக்கூறுகிறாள். தான் நாதெரிடம் பேசுவதாகக் கூறுகிறாள் சிமென்.
அதனைத் தொடர்ந்து நாதெருக்கு அப்பணிப்பெண்ணுக்கு கரு கலைந்து விட்டதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வருகிறது. அங்கே செல்கிறான். சிமென்னும் அவனோடு அங்கு வருகிறாள். அங்கே அப்பணிப்பெண்ணின் கணவன் நாதெரை அடிக்கிறான். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அப்பணிப்பெண்ணின் கணவன் டெர்மியின் பள்ளிக்கு வந்து அனைவரிடமும் அவளின் தந்தை தன் குழந்தையை கொன்று விட்டதாக சொல்கிறான். வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. கடைசியில் தங்களுடைய மகளுக்காக ரத்தப் பணம் கொடுத்து அவர்களை வழக்கைத்திரும்பப் பெற வைக்கலாம், இல்லையெனில் அப்பணிப்பெண்ணின் தந்தை தன் மகளை ஏதாவது செய்து விடுவான் என சீமென் கெஞ்சுகிறாள். ஆரம்பத்தில் முடியாது, தான் அக்கொலையை செய்யவில்லை என வாதாடும் நாதெர் கடைசியில் டெர்மிக்காக சம்மதிக்கிறான். பணிப்பெண்ணின் கணவனும் தன் ஏழ்மையினை நினைத்து பணத்திற்காக சரி என்கிறான். ஆனால் அப்பணிப்பெண்ணொ கடைசியில் தன் கரு கலைந்ததற்கு நாதெர் தள்ளி விட்டது காரணமாக இருக்கமுடியாது, அதற்கு முந்தைய நாள் தான் ஒரு விபத்தில் சிக்கியதால் தான் இருக்கும் எனவும், அதனால் தனக்கு அந்தப் பணம் வேண்டாம் எனவும் கூவிடுகிறாள். அதனால் கடைசில் விரக்தியடைந்து அப்பணிபெண்ணின் கணவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். சில மாதங்கள் கழித்து நாதெரும் சீமென்னும் விவாகரத்து கேட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வருகின்றனர். அத்தோடு படம் நிறைவடைகிறது.
மிக எளிய கதை. ஆனால் திரைக்கதை மிக மிக சிறப்பு. ஒரு நிகழ்வு இயல்பாக நடப்பதற்கு துளியும் மாறுவாடில்லாத காட்சிகள். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அப்படியே. எந்த ஒரு இடத்திலும் சினிமாத்தனம் இல்லாததே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றொன்று நடிப்பு, நாதெராகட்டும் இல்லை அப்பணிப்பெண்ணாகட்டும் ஆகச்சிறந்த நடிப்பு. அத்தோடு ஒளிப்பதிவும் சிறந்த ஒன்று, அது சினிமா என்பதனை உணர்த்தாத ஒளிப்பதிவு. எந்த ஒரு கோணமும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையிலேயே செல்லுமே ஒழிய, வீட்டின் கூரையிலிருந்து கேமரா வீட்டிற்குள் நுழையாது. மீண்டும் மீண்டும் உரக்க கத்துவதையும் இருபது பேரை ஒருவர் அடிப்பதையுமே மிகச்சிறந்த நடிப்பு என நம்மை நாமே ஏமாற்றி பார்க்கும் படங்களுக்கு மத்தியில் இப்படியொரு படம். இது போன்ற படங்களைப் பார்த்த பிறகும் கூட இன்னும் ஒயின் ஷாப்புகளையே வைத்து எத்தனை படம் எடுக்கப்போகிறார்களோ நம்மவர்கள்?