வாசிப்பு

ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னள‌வில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும் அந்த இரண்டு விழுக்காட்டிற்குள் வரமாட்டார் என்று பல முறை நிதர்சனத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் நம் சமூகம், சுற்றம், பெற்றோர் போன்ற பல்வேறு பட்ட நபர்களின் கருத்துக்களாகவே இருக்கிறோம். நாம் கேட்டது, அறிந்தது, நமக்கு கற்பிக்கப்பட்டது என அறிந்தவற்றின் அடிப்படையில் நாம் ஓர் அடிப்படைக் கட்டுமானத்தை நம‌க்குள் உருவாக்கி நிலை நிறுத்திக்கொள்கிறோம். அக்கட்டுமானம் உடைபட நாம் என்றுமே விரும்புவதில்லை. அதனைக் காக்கவே ஆதாரங்களைத் திரட்டுகிறோம். ஆனால் ஒரு நல்ல வாசிப்பு என்பது ஒரு தருணத்தில் அதுவரை நாம் தேக்கி உருவாக்கிய‌ அந்த அடிப்படையை அசைக்கிறது. தூள்தூளாக்குகிறது. ஆனால் மீண்டும் நாம் அந்த கட்டுமானத்தைக் கட்டுகிறோம் தர்க்க பூர்வமாக, இன்னும் வலுவாக. ஆனால் இந்தக் கட்டுமானம் எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராகவே இருக்கும்.

ஆனால் உண்மையில் நாம் எளிதாக அவ்வடிப்படைக்கட்டுமானத்தை விட தயாராக இருக்கிறோமா? இல்லை. நான் பலமுறை பல நபர்களிடம் வாசியுங்கள், ஏதாவது வாசியுங்கள் அது உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். செய்தித்தாள் மட்டுமே வாசித்து அதிலுள்ள தகவலை மட்டுமே விவாதிப்பவர்களிடம் ஏதாவது புத்தகங்களை வாசிக்கலாமே என்று சொல்வேன். ஏதாவது பதில் சொல்வார்கள், அல்லது கடந்த காலங்களில் நாங்கள் அப்படிப் படிப்போம், இப்படிப் படிப்போம் என்பார்கள். அல்லது நமக்குத் தெரிந்திருக்காத ஏதாவது புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப்பற்றியோ அரைகுறையாகப் பேசுவார்கள். நாம் தெரியாது என ஒப்புக்கொண்டுவிடுவதே அவ்விவாதத்தைக் குறைக்கும் வழி, நாம் ஏதாவது சொன்னால் அவர்கள் அதற்கு வேறு ஒரு உதாரணம் சொல்லுவார்கள். அது முற்றிலும் வெட்டியான பேச்சாக இருக்கும், சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதேதோ சொல்கிறார்கள் என்பதனை அந்தப் பேச்சின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ளலாம்.

அது போல் பேசுபவர்கள் குறிப்பிடும் நூலையோ, படத்தையோ,எழுத்தாளரையோ நான் உடனே படித்துவிடுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். இதுவும் வாசிப்பின் வழியாக எனக்குக் கிடைத்ததே. நண்பர்களே எந்த ஒரு சமூகம் அதிகமாக வாசிக்கிறதோ அந்த சமூகமே முன்னகர்கிறது. மற்ற சமூகங்கள் அதனைப் பின்தொடர மட்டுமே செய்கின்றன. இதுவே கடந்த 2000 ஆண்டுகால வரலாறு. அந்த வாசிப்பின் நீட்சியில் பிழைகளும் இருக்கலாம். அதனைக் களைந்துவிட்டு மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது அது ஆகச்சிறந்த சிந்தனைகளை அச்சமூகத்தில் விதைக்கிறது. சமூகம் முன்னகர்கிறது. வாசியுங்கள் நண்பர்களே! வாசியுங்கள்!

Similar Posts

  • | |

    இந்திய சினிமா 100

    இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை. இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில்…

  • மருந்து உலகம் – மாய உலகம்

    இன்றைய இந்தியக்குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் மருந்துப்பொருட்கள் வாங்காத குடும்பங்கள்? 5 விழுக்காட்டிற்கும் குறைவு. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக அளவிலான‌ மருந்து மாத்திரைகள் வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் சராசரி ஆயுள் உயர்ந்திருந்தாலும், பெரும்பாலானோர் தன் வாழ்நாளை ஏதாவது ஒரு நோயுடன் கழிக்கின்றனர். வயது குறைந்தோறும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.40 வயது உடையவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது இயல்பாகி விட்டிருக்கிறது. மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்வென்ப‌து இல்லாது போனது.  இவையெல்லாம்தான் நவீன இந்தியா. இப்போதைய பிரச்சினை ஒவ்வொரு குடும்பத்திற்குமான மருத்துவச்செலவு. மாதந்தோறும்…

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

  • இந்தியக் கண்டுபிடிப்புகள்

    கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாம் மட்டுமே 120 கோடி. சராசரியாக 6 விழுக்காடு உலக மக்கள் இந்தியர்கள். ஆனால் கண்டுபிடிப்புகள்? ஏன் இந்த நிலை? உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலைசிறந்த தொழில்நுட்ப…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.